போலி கடவுச்சீட்டு தயாரித்து வழங்கியமை தொடர்பான விசாரணைக்கு அமைவாக, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் (நிர்வாகம்) ஒருவர் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிப்பு தொடர்பான வழக்கு ஒன்றின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் சென்னையிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரின் புகைப்படம் இந்த கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அதற்குரிய கைரேகை உள்ளிட்ட உயிரியல் தரவுகள் வேறொரு நபருடையதாக சமர்ப்பிக்கப்பட்டு, மோசடியாக இந்த கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தேவையான சரிபார்ப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாமல், குறித்த போலி விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு, அதற்கமைவாக கடவுச்சீட்டை வழங்குவதற்கு உடந்தையாக இருந்து உதவினார் என்ற குற்றச்சாட்டிலேயே இந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அதிகாரி மாத்தறை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
