சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, உணவைத் தவிர்த்து தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது குடும்பத்தினருக்கும் சட்டத்தரணிக்கும் நேற்று அவரை நேரில் சந்திப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதன்போது, தான் தொடர்ந்தும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சுரேஷ் சலே அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளரான ஷானி அபேசேகரவை நீக்க வேண்டும் எனவும், தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை மாற்ற வேண்டும் எனவும் கோரியே அவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அநாகரீகமான மற்றும் கொடூரமான நடத்தைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல அரசியல் கட்சிகள் இணைந்து ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
