அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலிஃபோர்னியாவில் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் அருகிலுள்ள ராஞ்சோ பாலோஸ் வெர்டெஸில் அமைந்துள்ள டிரம்பின் கோல்ஃப் மைதானம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
38 வயதான ஜீனின் ஜான் டேலே (Jeanine John Taele) என்பவர், கோல்ஃப் மைதான வளாகத்தில் புகைப்படங்களும் காணொளிகளும் எடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்ட அவரிடம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி, 16 ரவைகள் அடங்கிய அதிக கொள்ளளவு கொண்ட மேகசின் மற்றும் தடைசெய்யப்பட்ட ஹாலோ-பாயிண்ட் (Hollow Point) குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் திணைக்களம் தெரிவித்தது.
மேலும் விசாரணையில், அவர் வேறொரு கொள்ளைச் சம்பவம் தொடர்பாகவும் காவல்துறையால் தேடப்பட்டு வந்தது தெரியவந்தது.
அவரது வாகனத்தில் ஏற்றப்பட்ட நிலையில் இருந்த கைத்துப்பாக்கி மற்றும் கூடுதல் ரவைகள் மீட்கப்பட்டதுடன், பின்னர் டவ்னி (Downey) பகுதியில் உள்ள அவரது வீட்டில் FBI மற்றும் ஷெரிப் துறையினர் இணைந்து சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட AR வகை துப்பாக்கி, .45 கைத்துப்பாக்கி, உடற்கவசம், அதிக கொள்ளளவு கொண்ட மேகசின்கள், பெருமளவு குண்டுகள் மற்றும் கவலைக்கிடமான குறிப்புகள் அடங்கிய பல நோட்டுப் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் அமெரிக்க ரகசிய சேவை (US Secret Service) இணைந்து விசாரணை நடத்தி வருவதுடன், எதிர்காலத்தில் மேலும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இதுவரை பொதுமக்களுக்கு அல்லது ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான நம்பகமான உடனடி அச்சுறுத்தல் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கலிஃபோர்னியா பயணத்தின் போது டிரம்ப் குடியரசுக் கட்சியின் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன், பின்னர் லாஸ் வேகாஸிலும் உரையாற்ற திட்டமிட்டிருந்தார். இந்த சம்பவம், அமெரிக்க இடைக்காலத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள சூழலில் இடம்பெற்றுள்ளது.
