மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் தலைநகரான பங்கிக்கு வடக்கே நடைபெற்ற ஆயுதமேந்திய கும்பலின் தாக்குதலில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த குடிமகன் ஒருவரும் மத்திய ஆப்பிரிக்க ராணுவ வீரன் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
“அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய கொள்ளையர்கள்” இந்தத் தாக்குதலை நடத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கனிம வளங்களை ஆராயும் பணியை மேற்கொள்வதற்காகச் சுவிட்சர்லாந்து நாட்டவர் அப் பகுதிக்குச் சென்றிருந்தார்.
அவருக்குப் பாதுகாப்பிற்காகச் சென்ற மத்திய ஆப்பிரிக்க ராணுவத்தின் கனிஸ்ட அதிகாரி ஒருவரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தார்.
தலைநகர் பங்கியில் இருந்து வடக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டமாரா நகருக்கு அருகே கடந்த வியாழக்கிழமை இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
உயிரிழந்த இருவரின் உடல்களும் தலைநகர் பங்கிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்க மத்திய ஆப்பிரிக்க நீதித்துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சுவிட்சர்லாந்து குடிமகன் உயிரிழந்ததைச் சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி வெளியுறவுத் துறை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
பங்கியில் உள்ள சுவிட்சர்லாந்து உதவி அலுவலகமும், கேமரூன் தலைநகர் யாவுண்டேவில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகமும் உரிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து தேவையான உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றன.
சூடான், காங்கோ ஜனநாயகக் குடியரசு உள்ளிட்ட நாடுகளை எல்லைகளாகக் கொண்ட மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, வைரம் மற்றும் தங்கம் போன்ற பெறுமதியான கனிம வளங்களைக் கொண்டிருந்தபோதிலும் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகவே உள்ளது.
2010-களில் நடந்த கொடூரமான உள்நாட்டுப் போருக்குப் பிறகு அங்கு பாதுகாப்பு நிலைமை சற்று மேம்பட்டிருந்தாலும், இன்னும் சீரற்ற நிலையிலேயே நீடித்து வருகிறது.
