தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் சில செயற்பாடுகள் காரணமாக, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு முட்டுக்கட்டைகள் ஏற்படலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக கத்தோலிக்க சபை தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கத்தோலிக்க சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் அரசியல் தலையீடுகள் இருக்குமானால், அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் குண்டுதாரிகள் மாத்திரமன்றி, அதனைத் திட்டமிட்ட ஒரு குழுவும் இருந்தது. அவர்களின் நோக்கம் என்ன? அவர்கள் யார்? இந்தத் தாக்குதல் ஒரு அரசியல் சதியா? உண்மை என்ன? உண்மையைக் கண்டறிவது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமையாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்த உரிமைக்காகவே கத்தோலிக்கச் சபை குரல் கொடுத்து வருவதாக விளக்கியுள்ளார்.
இந்த விசாரணைகள் நீண்டகாலமாக முடங்கிப் போயிருந்தன. தற்போது மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் கலக்கமடைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறிவதற்கும், குற்றவாளிகளைக் கண்டறிவதற்கும் இந்த விசாரணைகள் அவசியமாகும். யார் நினைத்தாலும் இந்த விசாரணைகளை சீர்குலைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகளை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக நீதிமன்றம் வரை கொண்டு செல்ல வேண்டும் என விசாரணைகளை மேற்கொள்ளும் குழுக்களிடமும் அரசாங்கத்திடமும் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளோ அல்லது அரசியல் கட்சிகளோ இந்த விசாரணைகளில் தலையிடக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுக்கும் இந்த விசாரணைகளுக்கு யாரும் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
