சுவிட்சர்லாந்தின் கிழக்கு நகரான சூர் (Chur), 1989 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் திகதி அலெக்சாண்டர்ஸ்ட்ராஸ் 38 (38 Alexanderstrasse) என்ற இடத்தில் நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதலின் நினைவாக கடந்த வியாழக்கிழமை ஒரு நினைவு வழிபாட்டை நடத்தியுள்ளது.
இனவெறி நோக்கம் கொண்டதாகக் கருதப்படும் இந்த கொடூரத் தாக்குதலில் இரு குழந்தைகள் உட்பட இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் தங்களது உயிர்களை இழந்திருந்தனர்.
இச்சம்பவம் நடந்து 37 வருடங்களின் பின்னர் நடைபெற்ற இந்நினைவு வழிபாட்டின் போது, குற்றச் சம்பவம் நடந்த இடத்திற்கு மிக அருகில் இதுவரை பெயரிடப்படாமல் இருந்த ஒரு வீதிக்கு, ‘நான்கு விளக்குகள் வீதி’ எனத் தமிழில் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தத் தீவைப்புத் தாக்குதலில் உயிரிழந்த நான்கு பலிகளையும் நினைவூட்டும் வகையிலும், பொதுவெளியில் அவர்களது நினைவுக்கு நிரந்தர இடமொன்றை வழங்கும் வகையிலும் இப்பெயர் சூட்டப்பட்டதாக சூர் நகர சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு ஒரு நினைவுப் பலகையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சூர் நகரத்தின் மேயரான ஹான்ஸ் மார்ட்டின் மெய்லி இந்த 1989 தீவைப்புத் தாக்குதலை “சூர் நகர வரலாற்றின் ஒரு கொடூரமான அத்தியாயம்” என விவரித்துள்ளார்.
அக்காலப்பகுதியில், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த இனவெறி அல்லது தீவிர வலதுசாரி நோக்கம் குறித்து அதிகாரிகள் போதுமான அளவு முழுமையாக விசாரணை நடத்தவில்லை எனவும், இதனால் பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்காமல் போனது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் தமிழ் சமூகத்திற்கும் கூடுதல் வேதனையை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடந்ததை நகர சபையால் மாற்றியமைக்க முடியாது. இழந்த உயிர்களைத் திரும்பக் கொண்டுவரவும் முடியாது. ஆனால், அன்று போதுமான அளவு தெளிவாகக் கூறப்படாதவற்றை இப்போது எங்களால் தெளிவாகக் கூற முடியும் மற்றும் கூற வேண்டும்” என மேயர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், தமிழ் சமூகத்திற்கும் அன்று இருந்த அதிகாரிகள் தங்களது பொறுப்பைச் சரியாக நிறைவேற்றவில்லை என்பதை நகரம் இப்போது ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நினைவு வழிபாடு ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, இந்து மத குருவான சசிகுமார் தலைமையில் சமய வழிபாடுகள் நடைபெற்றன. இதன்போது மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், புதிய பெயர் சூட்டப்பட்ட வீதிக்கு மாலை அணிவிக்கப்பட்டு, புனித நீர் தெளிக்கப்பட்டு, எண்ணெய் விளக்கேற்றி நினைவுப் பலகை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்வின் போது தமிழ் இந்து பிரார்த்தனைகளும், சங்கு முழங்கும் சடங்குகளும் இடம்பெற்றன.
இந்த நினைவுப் பலகையை நிறுவுவதன் மூலம் சூர் நாடாளுமன்றத்தின் கோரிக்கையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘டாஸ் மகசின்’ (Das Magazin) ஊடகம் மேற்கொண்ட புதிய விசாரணைகளின் மூலம் இந்தத் தீவைப்புத் தாக்குதலுக்குப் பின்னால் இனவெறி நோக்கம் இருந்ததற்கான சான்றுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த வழக்கை மறுபரிசீலனை செய்யவும், நினைவுப் பலகையை நிறுவவும் கோரி 2025 மே மாதத்தில் சூர் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
