ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இருந்து பாகிஸ்தானின் காராச்சி நகருக்கு 5 ஊழியர்களுடன் வந்த தனியார் சரக்கு விமானம் ஒன்று நடுவானில் மாயமாகியுள்ளது.
கடலில் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படும் இந்த விமானத்தைத் தேடும் பணியில் பாகிஸ்தான் கடற்படையும், விமானப்படையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
‘கே2 ஏர்வேஸ்‘ நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக சரக்கு விமானம், செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 21:21 மணிக்கு காராச்சிக்கு அருகே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
தொடர்பை இழப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, விமானத்தின் திசையறியும் கருவியில் (Navigation System) கோளாறு இருப்பதாக விமானி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் விமானம் மிக அதிவேகமாக கீழே இறங்கியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘பிளைட்ரேடார்24′ (Flightradar24) தளத்தின் முதற்கட்ட தரவுகளின்படி, மாயமாவதற்கு சற்று முன்பு அந்த விமானத்தின் பறக்கும் உயரத்தில் கடுமையான ஏற்றத்தாழ்வுகள் இருந்ததும், பின்னர் அது செங்குத்தாக கீழே நோக்கி பாய்ந்ததும் தெரியவந்துள்ளது.
2018-ல் தொடங்கப்பட்ட காராச்சியைச் சேர்ந்த கே2 ஏர்வேஸ் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், விமானத்தில் இருந்த 5 ஊழியர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. மேலும், “பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து வாரியம் மற்றும் அரசு அமைப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக இறைவனை வேண்டுகிறோம்” என்றும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இதற்கு முன்பு 2020ஆம் ஆண்டு பிஐஏ (PIA) பயணிகள் விமானம் காராச்சி விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானதில் 97 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மாயமான விமானத்தைக் கண்டறிய கடலோரப் பகுதிகளில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
