ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் புதன்கிழமை அதிகாலை வான் பாதுகாப்பு அமைப்புகள் மீண்டும் செயற்படுத்தப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தெஹ்ரான் பெரும்பாக கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் சில நிமிடங்களுக்கு முன்பு வான் பாதுகாப்பு அமைப்புகள் மீண்டும் செயற்படுத்தப்பட்டு, எதிரிகளின் இலக்குகளை எதிர்கொண்டு வருகின்றன” என்று ஈரானின் ‘தஸ்னீம்’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தலைநகரில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அரசு ஊடகங்களில் உடனடியாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
ஈரானிய அறிக்கைகளின்படி, அமெரிக்காவின் அண்மைக்காலத் தாக்குதல்களின் போது ஈரானின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள பல இடங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தெஹ்ரானிலிருந்து மேற்கே சுமார் 150 மைல் தொலைவில் உள்ள கபுதாரஹங் நகரத்தின் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹமேதான் மாகாணத் துணை ஆளுநரை மேற்கோள் காட்டி அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB தெரிவித்துள்ளது.
ஈரானின் வடமேற்கு நகரமான தப்ரீஸ் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்துடன் மேற்கு இலோம் மாகாணத்தில் உள்ள சாவார் மற்றும் அப்தானான் ஆகிய இடங்களிலும் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
மேற்கு ஈரானின் குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள பெஹ்பஹான் மற்றும் ஓமிதியே நகரங்களுக்கு அருகில் உள்ள பகுதிகள் இலக்கு வைக்கப்பட்டதாக ‘இர்னா’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹோர்மூஸ் நீரிணைக்கு அருகில் உள்ள மஹ்ஷாஹர், சிரிக் மற்றும் பெர்சிய வளைகுடாவில் உள்ள புஷெஹ்ர் ஆகிய நகரங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், தென்மேற்கில் உள்ள கொனாரக் மற்றும் சாபஹார் ஆகிய துறைமுக நகரங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின.
அமெரிக்காவிற்குத் “தண்டனை அளிக்கும் வகையில்” தங்களது புதிய அலைத் தாக்குதல்கள் புதன்கிழமை அதிகாலை முதல் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளதாக ஈரானின் புரட்சிகரக் காவல் படை அறிவித்துள்ளது.
இதனிடையே, புதன்கிழமை அதிகாலை வேளையில் தங்கள் வான் எல்லைக்குள் நுழைந்த ட்ரோன் தாக்குதல்களைத் தங்கள் வான் பாதுகாப்புப் படைகள் முறியடித்து வருவதாக குவைத் நாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
