ஈரானில் கடந்த மார்ச் மாதம் முதல் தூக்குத் தண்டனைகளும் மரணத் தண்டனைத் தீர்ப்புகளும் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் துர்க் எச்சரித்துள்ளார்.
மார்ச் 19 ஆம் திகதிக்குப் பிறகு, தேசிய பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் ஈரானில் குறைந்தது 56 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
இதில் 27 பேரின் வழக்குகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பரவலான அரசுக்கு எதிரான போராட்டங்களுடன் தொடர்புடையவை என வோல்கர் துர்க் தெரிவித்துள்ளார்.
ஈரானிய அதிகாரிகள் அனைத்துத் தூக்குத் தண்டனைகளையும் உடனடியாக நிறுத்தி, மரணத் தண்டனையை முற்றிலும் ஒழிப்பதை நோக்கி நகர வேண்டும் என ஐநா மனித உரிமைகள் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
நோர்வேயின் ஒஸ்லோவை தளமாகக் கொண்ட ‘ஈரான் மனித உரிமைகள்’ (IHR) அமைப்பு உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள், பிராந்திய மோதல்களின் பின்னணியைப் பயன்படுத்தி ஈரான் அரசு மரணத் தண்டனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளன.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஜூன் 17, 2026 அன்று கையெழுத்தான 14 அம்ச இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மனித உரிமைப் பாதுகாப்புகள் விடுக்கப்பட்டிருப்பதை ஐநா நிபுணர்களும் மனித உரிமை அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த அம்சம் விடுக்கப்பட்டமை, ஈரான் அரசு தனது உள்நாட்டு அடக்குமுறைகளையும் தூக்குத் தண்டனைகளையும் மேலும் வேகப்படுத்த வழிவகுத்துள்ளதாகச் செயல்பாட்டாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஈரான் அரசியல் அமைப்பின் மூத்த சீர்திருத்தவாத அரசியல்வாதியும், எவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியுமான முஸ்தஃபா தாஜ்சாதே, “இளம் போராட்டக்காரர்களைத்” தூக்கிலிடுவதை உடனடியாக நிறுத்தக் கோரி சிறையிலிருந்து திறந்த மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது நடைபெறும் தூக்குத் தண்டனைகள் நெருப்போடு விளையாடுவதற்குச் சமம். இவை மீண்டும் நாட்டை பேரழிவை ஏற்படுத்தும் வன்முறைச் சுழலுக்குள் தள்ளிவிடும்.
இத்தகைய தண்டனைகள் அரசிற்கும் சமூகத்திற்கும் இடையிலான இடைவெளியை மேலும் அதிகரிக்கும்; அமைதியான பேச்சுவார்த்தை மற்றும் மாற்றத்திற்கான வாய்ப்புகளைக் குறைத்து, நாடு மீண்டும் வன்முறையில் மூழ்குவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
