உலகக் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றில் அர்ஜென்டினா அணியிடம் சுவிட்சர்லாந்து ஆடவர் தேசிய கால்பந்து அணி தோல்வியடைந்து வெளியேறியுள்ள போதிலும், அந்த அணிக்கு சுவிஸ் அதிபர் கய் பார்மெலின் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மார்ட்டின் பிஃபிஸ்டர் ஆகியோர் தங்களது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
“எங்களுக்குள் பல உணர்ச்சிகளை ஏற்படுத்தியமைக்காக மிக்க நன்றி. அத்துடன் ஒட்டுமொத்த அணிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என அதிபர் பார்மெலின் தனது ‘X’ (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (சுவிஸ் நேரம்) சுவிட்சர்லாந்து அணி அடைந்த இந்தத் தோல்வி ஏமாற்றத்தை அளித்தாலும், ஒட்டுமொத்த சுவிஸ் நாட்டு மக்களையும் கவர்ந்த இந்த சுவிட்சர்லாந்து அணியின் அசாதாரணமான ஆட்டமும், அவர்களது கூட்டு முயற்சியுமே தனது நினைவில் எப்போதும் நிலைத்திருக்கும் என அதிபர் பார்மெலின் குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சர் பிஃபிஸ்டரும் இதேபோன்றதொரு செய்தியைப் பகிர்ந்துள்ளார். உலகக் கிண்ண தொடரிலிருந்து வெளியேறியது வேதனையளித்தாலும், காலிறுதிச் சுற்று வரை முன்னேறியதன் மூலம் சுவிஸ் கால்பந்து வரலாற்றில் இந்த அணி புதிய சாதனையைப் படைத்துள்ளதாக அவர் ‘X’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். “இதற்காக இந்த அணி பெரும் மரியாதையையும் எங்களது மனமார்ந்த நன்றிகளையும் பெறத் தகுதியுடையது” என்றும் அவர் எழுதியுள்ளார்.
உலக சாம்பியனான அர்ஜென்டினா அணியுடனான இந்த காலிறுதிப் போட்டி கன்சாஸ் நகரில் நடைபெற்றது. கூடுதல் நேரத்தில் முராத் யாகினின் தலைமையிலான சுவிட்சர்லாந்து அணி 1-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்தது.
இப் போட்டியைக் நேரில் காண்பதற்காக விளையாட்டுத் துறை அமைச்சர் பிஃபிஸ்டர் மைதானத்திற்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டி முடிந்ததைத் தொடர்ந்து சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமூக வலைத்தளங்கள் ஊடாக தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். மத்திய கட்சியின் செனட்டர் ஆண்ட்ரியா க்மூர்-ஷோனன்பெர்கர் வெளியிட்ட பதிவில், “எங்கள் தேசிய அணி – என்னவொரு வீரம் மிக்க மனிதர்கள்! இந்த பரபரப்பான உலகக் கிண்ண ஆட்டத்திற்கு நன்றி!” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான எலிசபெத் ஷ்னைடர்-ஷ்னைட்டர் , “ஒரு கசப்பான முடிவு. சிறப்பாக விளையாடினீர்கள்” என எளிய முறையில் பாராட்டியுள்ளார். இதற்கிடையில், சூரிச்சைச் சேர்ந்த லிபரல் க்ரீன் நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் ஹாசிக், இந்த சுவிஸ் அணி தங்களுக்கு ஒரு “கோடைகால தேவதைக் கதையை” பரிசளித்ததாகக் கூறி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
