தாய்லாந்தின் பூக்கெட் நகரிலிருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் இன்று நடுவானில் திடீரெனக் கடும் காற்றுக் கொந்தளிப்புக்கு உள்ளானது.
அப்போது விமானம் எதிர்பாராதவிதமாக சுமார் 300 அடி உயரத்தை உடனடியாக இழந்ததில், விமானத்தில் இருந்த 15 பேர் காயமடைந்தனர்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் AI2379 என்ற எண் கொண்ட ஏ320 (A320) ரக குறுகிய இடைவெளி விமானத்தில் 134 பயணிகளும், 8 ஊழியர்களும் பயணம் செய்தனர்.
இன்று காலை நடுவானில் ஏற்பட்ட இந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து, காலை 11.30 மணியளவில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் 11 பயணிகள் மற்றும் 4 விமானப் பணிப்பெண்கள் உட்பட 15 பேர் காயமடைந்தனர். இதில் பணிப்பெண் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மற்றவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த அனைவரும் உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவினரால் முதலுதவி அளிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இது குறித்து இந்திய விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், “விமானம் திடீரென 300 அடி உயரத்தைக் குறைந்ததால் ஏற்பட்ட காற்றுக் கொந்தளிப்பில் ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்குக் காயங்கள் ஏற்பட்டதாக விமானி தகவல் அளித்துள்ளார்.
இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “பயணத்தின் போது ஏற்பட்ட எதிர்பாராத காலநிலை மாற்றத்தால் தற்காலிகமாக விமானத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டது. விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக மோசமான வானிலை இருக்கும் போது விமானிகள் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுப்பது வழக்கம். இருப்பினும், நடுவானில் ஏற்படும் கடும் காற்றுக் கொந்தளிப்பால் பயணிகள் காயமடைவது அரிதான நிகழ்வாகும். இச்சம்பவம் குறித்து டிஜிசிஏ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
