இலங்கையின் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 6 பேர் காயமடைந்து தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, 7 பேர் ராகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
சிறைக்கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதமே இந்த மோதலுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
மோதலின் போது, கைதிகள் சிலர் பிரதான சிறைக்காவலர் அலுவலகம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவு கட்டிடத்திற்கு தீ வைத்துள்ளனர். பரவிய தீயைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சிறை வளாகத்தில் நிலவும் பதற்றத்தைக் கட்டுப்படுத்த மேலதிக சிறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சிறைச்சாலைக்கு வெளியே அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாதவாறு பாதுகாப்பிற்காக விசேட காவல்துறைக் குழுக்கள் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ள போதிலும், இச்சம்பவம் குறித்து இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.
இன்று மதியம் கைதிகளைப் பார்ப்பதற்காக வருகை தந்த உறவினர்கள் சிறை வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் சிறைச்சாலைக்கு வெளியே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
அதேவேளை, சிறை வளாகத்திற்குள்ளிருந்து பல முறை துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக வெளியே காத்திருக்கும் உறவினர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
