பெருவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
‘செஸ்னா காரவன் சி-208’ ரகத்தைச் சேர்ந்த சிறிய விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளானது.
பெருவின் புகழ்பெற்ற நாஸ்கா லைன்ஸ் தொல்பொருள் பகுதிக்கு அருகில் உள்ள ‘புவெப்லோ வீஜோ’ பகுதியில் இந்த விபத்து இட்ம்பெற்றுள்ளது.
குறித்த விமானத்தில் 11 சுற்றுலாப் பயணிகளும் 2 விமானிகளும் இருந்தனர். உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளில் 7 பேர் இத்தாலியையும், 2 பேர் ஜெர்மனியையும், 2 பேர் ஸ்பெயினையும் சேர்ந்தவர்களாவர்.
இந்த விமானம் உள்ளூர் பெரு விமான நிறுவனமான ‘ஏரோடயானா’ நிறுவனத்திற்குச் சொந்தமானது.
பிஸ்கோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், உள்ளூர் நேரப்படி மதியம் 13:00 மணியளவில் விபத்துக்குள்ளானது.
விபத்தின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இதில் எவரும் உயிர்தப்ப வாய்ப்பில்லை. இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் விமானத்தின் எஞ்சிய பாகங்களில் இருந்து எழும்பிய புகையை அணைக்கும் பணியில் ஈடுபட்ட காட்சிகளை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இந்த சோகமான சம்பவத்திற்கு நாஸ்கா மாகாண நிர்வாகம் தனது “ஆழ்ந்த துயரத்தை” தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.
விமான நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அதிகாரிகளின் வழிகாட்டுதலுக்கு அமைவாக தங்களது விமான சேவைகள் மறுபரிசீலனை செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
