சுவிட்சர்லாந்தின் பல கான்டன்களில் காட்டுத்தீ ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் அலுவலகம் எச்சரித்துள்ளது.
வாலாய்ஸ் கான்டனில் சில பகுதிகளில் காட்டுத்தீ அபாயத்தின் அளவு 5-க்கு 4 ஆக (Warning Level 4) உயர்த்தப்பட்டுள்ளது.
இது இந்த அளவீட்டு முறையில் இரண்டாவது மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையாகும். வாலாய்ஸ் கான்டனின் அலெட்ச் (Aletsch), அன்னிவியர்ஸ் (Anniviers), ஆர்பில் (Arpille), பாக்னஸ் (Bagnes) மற்றும் எவோலீன் (Evolène) ஆகிய பகுதிகளில் இந்த ஆபத்து அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் ஏற்கனவே கடந்த ஜூன் 23 முதல் சியோன், சிம்ப்ளன், புல்லி, ரிட்ஸ் போன்ற இடங்களில் மிக அதிக அளவிலான காட்டுத்தீ அபாயம் நிலவி வரும் நிலையில், தற்போது மேலும் பல இடங்களுக்கு இந்த எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாலாய்ஸ் மாகாணம் மட்டுமன்றி, சுவிட்சர்லாந்தின் பிற முக்கிய கான்டன்களில்
- ஆர்காவ் (Aargau)
- சூரிச் (Zurich)
- லூசெர்ன் (Lucerne)
- உரி (Uri)
- க்ளாரஸ் (Glarus)
- செயின்ட் காலன் (St Gallen)
ஆகிய பகுதிகளிலும் காட்டுத்தீ ஏற்படுவதற்கான ஆபத்து மிக அதிகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் இந்த அபாயகரமான வானிலைச் சூழலில், தீக்குச்சிகளைக் கொளுத்துவது, திறந்தவெளியில் பார்பிக்யூ (Barbecue) செய்யும்போது பறக்கும் சிறிய நெருப்புப் பொறிகள் அல்லது எதிர்பாராத மின்னல் தாக்குதல்கள் போன்றவற்றால் மிக எளிதாக காட்டுத்தீ பரவக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
காட்டுப் பகுதிகளில் தீ பரவும் வேகம் மிக அதிகமாக இருக்கும் என்பதால், இத்தகைய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் எனவும், அதனை அணைப்பதற்குப் பெருமளவிலான மனித உழைப்பும் நேரமும் தேவைப்படும் எனவும் சுற்றுச்சூழல் கூட்டாட்சி அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் வனப்பகுதிகளுக்கு அருகில் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
