சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் இன்றைய தினம் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகி, பல ஆண்டுகளாக நிலவிய ஜூலை 29-ஆம் திகதிக்கான வெப்பநிலை சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தின் ஒப்வால்டன் (Obwalden) கான்டனில் உள்ள எங்கெல்பெர்க் (Engelberg) நகரில் வெப்பநிலை 29.1 செல்சியஸ் வரை உயர்ந்தது. இதன்மூலம், 1979 ஆம் ஆண்டு பதிவான 26.7 செல்சியஸ் என்ற முந்தைய சாதனை 2 பாகைக்கும் அதிகமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், செயின்ட் காலன் நகரிலும் வெப்பநிலை 28.6 செல்சியஸ் வரை உயர்ந்து, 1990 ஆம் ஆண்டில் பதிவான 26.9 செல்சியஸ் என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
மேற்கு சுவிட்சர்லாந்தின் வோட் மாகாணத்தில் உள்ள பயேர்ன் நகரில் 33.5 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி, 1979 ஆம் ஆண்டு பதிவான 32.0 செல்சியஸ் என்ற ஜூலை 29-ஆம் திகதிக்கான முந்தைய சாதனை உடைக்கப்பட்டது.
தற்போது நிலவும் கடும் வெப்ப அலை வியாழக்கிழமை உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் வானிலை மற்றும் காலநிலை ஆய்வு மத்திய அலுவலகமான வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் வெப்பநிலை 34 முதல் 38 செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வியாழக்கிழமை பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு பதிலாக, மழையின்றி பலத்த காற்று வீசும் “Dry Squall Front” எனப்படும் வானிலை நிகழ்வு ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதிகரித்து வரும் இந்த வெப்ப அலை காரணமாக, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் தேவையற்ற வெளிப்புறச் செயல்பாடுகளைத் தவிர்த்து, போதிய அளவு தண்ணீர் அருந்தி பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
