அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்றும், ‘ஓமன்‘ நாட்டுடன் மட்டுமே பேசி வருவதாகவும் ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் தலைமையை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்‘ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், பேச்சுவார்த்தைக்கு மறுப்புத் தெரிவிக்கும் ஈரானின் போக்கைக் கண்டித்துள்ளார்.
ஈரானிய தலைமை நம்பமுடியாத அளவிற்கு வஞ்சகமானது! அவர்களே ஒரு சந்திப்பைக் கேட்கிறார்கள் (சிலர் அதை ‘பிச்சை கேட்கிறார்கள்‘ என்பார்கள்), பேச்சுவார்த்தைகளும் தொடங்குகின்றன, மேலும் பல சந்திப்புகள் மிக விரைவில் நடக்க திட்டமிடப்பட்டும் உள்ளன.
ஆனால் அவர்கள் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்றும், எதுவும் விவாதிக்கப்படவில்லை என்றும், ‘ஓமன்‘ நாட்டுடன் மட்டுமே பேசி வருவதாகவும் பகிரங்கமாகவும் பெருமையாகவும் கூறுகிறார்கள்.”
அதன் பிறகு, வழக்கம்போல உளறிக்கொண்டு, ஹோர்முஸ் நீரிணையை தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் பலமாக இயக்குவோம் என்று கூறுகிறார்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால், அது ஏற்கனவே அமெரிக்கக் கடற்படையாலும், எங்கள் ‘உருக்குச் சுவர் அடைப்பாலும்‘ முழுமையாகக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுவிட்டது என தெரிவித்துள்ளார்.
நாங்கள் விரும்பினால் ஒழிய, ஈரானுக்குள் எதுவும் செல்ல முடியாது; ஒரு சரியான ஒப்பந்தம் அல்லது முழுமையான சரணடைதல் எட்டப்படும் வரை எதுவும் உள்ளே நுழையவும் முடியாது. ஈரான் அதை ஒப்புக்கொள்ள விரும்பாவிட்டாலும், பல தசாப்தங்களாக அவர்களால் உருவான ஒரு பிரச்சனைக்கு நாங்கள் தீர்வைத் தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இது மிகவும் எளிமையானது, ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைப் பெற முடியாது!” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நேரடியாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சின் பேச்சாளர் கூறியதைத் தொடர்ந்து, ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கைப் பதிவு வெளியாகி உலகளவில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
