அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான தற்காலிக அமைதி ஒப்பந்தத்தின் (Truce) நீடித்த நிலைத்தன்மை குறித்து உலக சந்தையில் எழுந்துள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு மத்தியில், பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை மீண்டும் ஒரு பேரலுக்கு 1 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வர்த்தக முடிவில் (22:06 GMT நேரப்படி), சர்வதேச அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் எதிர்கால விலை $1.09 (1.35 சதவீதம்) அதிகரித்து, ஒரு பேரல் $81.66 டாலராக உயர்ந்தது.
ஞாயிறு வர்த்தகத்தின் தொடக்கத்தில், கச்சா எண்ணெய் விலை அதிகபட்சமாக $82.30 டாலர் வரை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது என ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக உடன்படிக்கையைத் தொடர்ந்து, சில எண்ணெய் விநியோகக் கப்பல்கள் (Tankers) ஹார்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்க முடிந்ததால் கச்சா எண்ணெய் விலை ஓரளவுக்குக் குறைந்திருந்தது.
இருப்பினும், லெபனானில் நிலவும் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கைகள் காரணமாக, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் மீண்டும் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த இழுபறி நிலையே தற்போது கச்சா எண்ணெய் விலை மீண்டும் சட்டென்று உயர்வதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
