Homeபயணம்குவைத் வான்வெளி மீண்டும் திறப்பு

குவைத் வான்வெளி மீண்டும் திறப்பு

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை அதிகாலை தற்காலிகமாக மூடப்பட்ட குவைத் நாட்டின் வான்வெளி தற்போது சிவில் விமானப் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

குவைத் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களும் தற்போது தங்களின் வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்பியுள்ளதாகக் குவைத் விமானப் போக்குவரத்து பொது அதிகாரசபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தின் தற்போதைய பாதுகாப்புச் சூழல் மற்றும் வான்வெளிப் பகுதிகளைச் சுற்றியுள்ள நிலைமைகளை அதிகாரிகள் 24 மணி நேரமும் மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

சிவில் விமானப் போக்குவரத்துப் பயணிகளின் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே வான்வெளியை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வியாழக்கிழமை அதிகாலை 4:50 மணியளவில் குவைத் வான் எல்லைக்குள் ஈரானிய ஏவுகணைகள் ஊடுருவியதை அடுத்து வான்வெளி அவசரமாக மூடப்பட்டது.

இதனால் குவைத் நோக்கி வந்த பல சர்வதேச விமானங்கள் சவூதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகளின் மாற்று விமான நிலையங்களுக்கு அவசரமாகத் திருப்பிவிடப்பட்டன.

அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகக் குவைத், ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ முகாம்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்திருந்தது.

தற்போது வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், திருப்பிவிடப்பட்ட மற்றும் தாமதமடைந்த சர்வதேச விமானச் சேவைகளை விரைவாக ஒழுங்குபடுத்தும் பணியில் விமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

பயணிகள் தங்களின் பயண விபரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular