பிரபல எழுத்தாளர் இ. ஜீன் கரோலை (E. Jean Carroll) பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்ததற்கும், அவதூறு பரப்பியதற்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என்ற கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடியாக உறுதி செய்துள்ளது.
இத்தீர்ப்பிற்கு எதிராக டிரம்ப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த அதிரடி உத்தரவின் மூலம், 1990-களின் நடுப்பகுதியில் நியூயார்க் வணிக வளாகம் ஒன்றில் டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாகத் தாக்கினார் என்றும், பின்னர் அதனைப் பொய் எனக் கூறி அவதூறு பரப்பினார் என்றும் கரோல் 2022-இல் தொடர்ந்த சிவில் வழக்கில் விதிக்கப்பட்ட 5 மில்லியன் டொலர் அபராதத் தொகையை டிரம்ப் உடனடியாகச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தன் மீதான குற்றச்சாட்டுகளை டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து மறுத்து வரும் நிலையிலும், நீதிமன்றம் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இது தவிர, 2019-ஆம் ஆண்டு கரோல் தொடர்ந்த மற்றொரு அவதூறு வழக்கில் டிரம்பிற்கு கூடுதலாக 83 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
வட்டியுடன் சேர்த்து, இவ்விரு வழக்குகளிலும் டிரம்ப் தற்போது கரோலுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேல் நிலுவை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கரோலின் வழக்கறிஞர் ரொபர்ட்டா கப்லான், இந்த முடிவு ஜூரியின் ஒருமனதான தீர்ப்பை “இறுதியாக உறுதிப்படுத்தியுள்ளதாகக்” குறிப்பிட்டதோடு, 5 மில்லியன் டொலர் அபராதத்தை ரத்து செய்ய டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளின் முடிவைக் குறிக்கிறது என்றும் கூறினார்.
டிரம்பின் சட்டக் குழுவின் செய்தித் தொடர்பாளர் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த வழக்குகள் அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டவை என்று சாடியுள்ள அவர், ஜனாதிபதி தனது அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் தொடர்ந்து கவனம் செலுத்துவார் என்றும் தெரிவித்தார்.
விசாரணை நீதிபதி பல சட்டப் பிழைகளை இழைத்துள்ளதாக டிரம்ப் தரப்பு வாதிட்ட போதிலும், அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்ப்பின் மேல்முறையீட்டை நிராகரித்து, 5 மில்லியன் டொலர் அபராதத்தை உறுதி செய்து இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
