ஈரானால் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படக்கூடிய சேதங்களைச் சீரமைப்பதற்கும், வளைகுடா நாடுகளின் மறுசீரமைப்புப் பணிகளுக்கும், அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துகளைப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஆலோசித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகளுக்கு ஈரானால் ஏற்கனவே ஏற்பட்டுள்ள சேதங்களின் அளவை மதிப்பீடு செய்யுமாறு தனது அதிகாரிகளுக்கு ஸ்காட் பெசென்ட் உத்தரவிட்டுள்ளார்.
இந்த முந்தைய சேதங்களைச் சரிசெய்வதற்கும் ஈரானிய சொத்துகளைப் பயன்படுத்துவது குறித்து வாஷிங்டன் பரிசீலிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ‘தி நியூயார்க் போஸ்ட்‘ (The New York Post) மற்றும் ‘பாக்ஸ் நியூஸ்‘ (Fox News) ஆகிய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானால் எதிர்காலத்தில் வளைகுடா நட்பு நாடுகளுக்கு ஏற்படுத்தப்படும் எந்தவொரு சேதத்தையும் சீரமைப்பதற்கும் மறுசீரமைப்பதற்கும், முடக்கப்பட்டுள்ள அனைத்து ஈரானிய சொத்துகளையும் கிடைக்கச் செய்வதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் திறைசேரி திணைக்களம் பயன்படுத்தும்” என திறைசேரி தரப்பு அதிகாரி ஒருவர் கூறியதாக அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அமெரிக்காவின் இந்த அதிரடி ஆலோசனை குறித்த தகவல்கள், ஈரான் தரப்பிலிருந்து வந்த ஒரு முக்கிய அறிக்கைக்கு அடுத்த நாளே வெளியாகியுள்ளன.
ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகரான மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei), சிஎன்என் (CNN) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “பிராந்திய அமைதி ஒப்பந்தம் என்பது அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள ஈரானின் 24 பில்லியன் டொலர் சொத்துகளை விடுவிப்பதிலேயே தங்கியுள்ளது” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், அந்தச் சொத்துகளை ஈரான் வசம் ஒப்படைப்பதற்குப் பதிலாக, வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புக்கு மாற்றியமைக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவது பிராந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
