மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே தீவிரமடைந்துள்ள போருக்கு இடையே, அமெரிக்க ராணுவம் புதன்கிழமை இரவு ஈரான் மீது மீண்டும் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதன் மூலம் ஐந்து மாதங்களாகத் தொடரும் இந்தப் போர் மேலும் பிற நாடுகளுக்கும் பரவி தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்கப் படைகள் இன்று இரவு 8:00 மணிக்கு ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கின. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது நேற்று ஈரான் நடத்த முயன்ற தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் சக்திவாய்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமெரிக்க மத்திய கட்டளையகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எகிப்தின் டாமியேட்டா துறைமுகத்தில் நின்றிருந்த அமெரிக்காவுக்குச் சொந்தமான எரிவாயு சேமிப்புக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு தீப்பற்றியதாக பிரித்தானிய கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்தது.
அமெரிக்க மற்றும் சவூதி அரேபியப் படைகள் இணைந்து ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தின.
இத்தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சவூதி அரேபியா பகிரங்கமாக அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் நடத்தியது இதுவே முதல்முறையாகும்.
ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்களை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைகளை வீசியது. அவற்றில் 5 ஏவுகணைகளை ஜோர்டான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
நேற்று அவர்கள் நம் மீது தாக்குதல் நடத்தினார்கள், இப்போது நமது முறை. நாங்கள் மிகக் கடுமையான பதிலடி கொடுப்போம் என வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
போர் தீவிரமடைந்ததை அடுத்து, சர்வதேசச் சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 8%க்கும் அதிகமாக உயர்ந்து, ஒரு பேரல் 90 டொலரைக் கடந்தது.
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலுடன் இப்போர் தொடங்கியது. ஜூன் மாதத்தில் எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்தம் முறிந்த நிலையில், உலகளவில் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளதால் பதற்றம் உச்சமடைந்துள்ளது.
