ஈரானுடன் விரைவாக ஒரு உடன்பாடு எட்டப்படும் பட்சத்தில், அந்நாட்டின் மீது திட்டமிடப்பட்ட இராணுவத் தாக்குதல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பதிவில், ஒப்பந்தத்திற்கான அடிப்படை எல்லைகள் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதால், தாக்குதல்களை ஒத்திவைக்குமாறு ஈரான் மற்றும் இதர மத்திய கிழக்கு நாடுகள் தன்னிடம் கேட்டுக்கொண்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூற்றுகள் வெளியான நிலையில் டிரம்ப்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் கண்டிடாத மிகப்பெரிய இராணுவ அச்சுறுத்தலுக்கு அமெரிக்கா தயாராக உள்ளதாகத் தெரிவித்த டிரம்ப், உலக நலன் மற்றும் ஈரானின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தாக்குதலை ரத்து செய்வதாகவும், ஆனால் அதற்கு ஈரானுடன் விரைவாக உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.
இதேவேளை, ஈரானின் தற்காலிகப் பாதுகாப்பு அமைச்சர் மஜித் இப்னு அல்-ரெஸா பேசுகையில், எதிரிகளின் ஒவ்வொரு அச்சுறுத்தலையும் உண்மையானதாகவே ஈரான் கருதுகிறது என்றும், ஈரான் எப்போதும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஜனாதிபதி டிரம்ப்பைத் தொடர்புகொண்டு பிராந்தியத்தில் பதற்றத்தைக் குறைக்க ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு வலியுறுத்தினார்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான இந்த மோதல் போக்கு காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கடும் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.
மேலும், அமெரிக்காவில் 60% மக்கள் இந்தப் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் காரணமாக டிரம்ப் நிர்வாகத்திற்கு உள்நாட்டிலும் அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளது.
