வெளிநாடுகளுக்கோ அல்லது வேறு பயணங்களின்போதோ மற்றவர்களுக்குச் சொந்தமான பொதிகள் அல்லது பயணப்பைகளை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை சுங்கத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
சட்டவிரோதப் பொருட்கள் மற்றும் போதைப் பொருட்களைக் கடத்துவதற்கு, விவரம் அறியாத பயணிகள் பயன்படுத்தப்படக் கூடும் என சுங்கத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
தான் என்ன கொண்டு செல்கிறோம் என்பதே தெரியாமல் பலர் இவ்வாறான பாரதூரமான குற்றச் செயல்களில் சிக்கிக்கொள்வதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
விமானப் பயணம் அல்லது ஏனைய பயணங்களின் போது மற்றவர்களுக்குச் சொந்தமான பொதிகளையோ அல்லது லக்கேஜ்களையோ எடுத்துச் செல்ல வேண்டாம் என பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
19 வயது இளைஞர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கடந்தகால சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த பொதியில் என்ன இருக்கிறது என்பது வேறொரு நபருக்குத் தெரிந்திருந்தும், அந்த இளைஞரின் பெயரிலேயே அப்பொருட்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கடத்தல்காரர்கள் தங்களுக்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்களைக் கூட அவர்களுக்குத் தெரியாமலேயே இதுபோன்ற கடத்தல்களுக்குப் பயன்படுத்துவதை சுங்க அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
எனவே, உங்களுக்குச் சொந்தமில்லாத எந்தவொரு பொருளையும் எடுத்துச் செல்ல ஒருபோதும் ஒப்புக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் தாங்களே அந்தப் பைகளைச் சோதித்துப் பார்த்தாலும் கூட, சுலபமாக கண்டுபிடிக்க முடியாதவாறு சட்டவிரோதப் பொருட்கள் மறைத்து வைக்கப்படலாம்.
பின்னணி என்னவென்று புரியாமல் மற்றவர்கள் வழங்கும் இலவச பயண ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்வது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். “ஒருவர் உங்களுக்கு இலவசமாக டிக்கெட் வாங்கி வெளிநாட்டிற்கு அனுப்புகிறார் என்றால், அவர் ஏன் அப்படிச் செய்கிறார் என்பதை ஆழமாக யோசியுங்கள்” என அவர் சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்குப் பல நாடுகளில் மரண தண்டனை உட்பட மிகக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுமாறு சந்தன புஞ்சிஹேவா வலியுறுத்தியுள்ளார்.
