பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் (Antwerp) நகரில் உள்ள 10 அடுக்குமாடி குடியிருப்பு கோபுரம் ஒன்றில் புதன்கிழமை காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு ஆண்ட்வெர்ப் பகுதியின் லிங்கெரூவர் (Linkeroever) மாவட்டத்தில் உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது மாடியில் காலை பயங்கர தீ எரியத் தொடங்கியதாக உள்ளூர் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
200-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த பிரம்மாண்டமான கட்டிடத்திற்குப் பல தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசர கால மீட்புக் குழுக்கள் விரைந்து வந்தன. தீயின் தீவிரம் மற்றும் அடர்ந்த புகை காரணமாக மீட்புப் பணியில் பெரும் சவால்கள் ஏற்பட்டன.
கட்டிடத்தின் உள்ளே மோசமான பார்வைத்திறன் மற்றும் கடுமையான புகை காரணமாக தீயை அணைப்பது மிகவும் சிக்கலாக இருந்ததாக ஆண்ட்வெர்ப் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஆண்ட்வெர்ப் மேயரும், பெல்ஜியத்தின் தற்போதைய பிரதமருமான பார்ட் டி வீவர் தனது சமூக ஊடகப் பதிவில், “லிங்கெரூவர் பகுதியில் நடந்த இந்த கொடூரமான தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாகவும் பாதுகாப்பாகவும் உதவ உழைக்கும் அவசரக்கால மீட்புப் படையினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த துல்லியமான விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. தீ விபத்து ஏற்பட்ட லிங்கெரூவர் பகுதி பல உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த ஒரு முக்கிய குடியிருப்புப் பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
